

திருவள்ளூர்,
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூர் பயண பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
”அதிமுக ஆட்சிக்காலத்தில் வரி உயர்வு இல்லை. கொரோனா காலத்தில் கூட அதிமுக அரசு திறமையாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றியது. திமுக ஆட்சிக்கு வந்து 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த மக்களிடம் திமுக அரசு வரி வாங்குகிறது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து மீனவர்களுக்கு திமுக துரோகம் செய்தது. தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை கொண்டு வர முயல்கிறார் ஸ்டாலின். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு மக்கள்தான் எஜமான். உங்களுக்கு குடும்பம்தான் முக்கியம். வாரிசு அரசியல் வேண்டுமா?
அதிமுகவை குறைத்து எடை போட வேண்டாம். வாக்குப்பதிவு இயந்திரம் உடையும் அளவுக்கு மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பாளர்கள். அந்த அளவுக்கு திமுக மீது மக்கள் வெறியில் உள்ளனர்.”
இவ்வாறு அவர் பேசினார்.