மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

பருவமழை காலம் தொடங்கும்முன்பே சென்னையில் உள்ள நீர்நிலைகள், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

மு.க.ஸ்டாலின் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன்பின்னர் திரு.வி.க. நகர் மண்டலம் ஸ்ட்ரான்ஸ் ரோடு மற்றும் கொண்ணூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் நீர்வள ஆதார துறையின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பாபா நகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீரையும் மற்றும் அருகில் உள்ள பூம்புகார் நகர், ஜானகிராம் காலனி, எஸ்.ஆர்.பி. நகர், சீனிவாசா நகர், செந்தில் நகர் உமாமகேஸ்வரி நகர், செல்வி நகர், அஞ்சுகம் நகர், சரோஜினி நகர், அய்யப்பா நகர், கே.கே.ஆர்.கார்டன், பழனியப்பா நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 33 கி.மீ. நீளத்துக்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.102.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாதவரம் மண்டலம், பிரிட்டானியா நகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீரையும் மற்றும் கலெக்டர் நகர், செந்தில் நகர், வேலம்மாள் நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், பிர்லா அவென்யூ, ரங்கா அவென்யூ, ராசி நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 31 கி.மீ. நீளத்துக்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.122.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆகாயத்தாமரை அகற்றும் பணி

அதனைத்தொடர்ந்து மணலி மண்டலம், ஆமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில், நீர்வள ஆதாரத் துறை சார்பில் ரூ.87.50 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் ஆகாயத் தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணிகளையும், உபரிநீர் கால்வாயின் பாலங்கள் சீர்செய்யும் பணிகளையும், கொசஸ்தலை ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் கால்வாயில் தேங்கியுள்ள சேறு, சகதி, ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் தாவரங்களை ரொபாடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் எந்திரங்களை கொண்டு அகற்றும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கால்வாய் இணையும் இணைப்பு கால்வாயில் ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு ஆகாயத்தாமரை அகற்றும் பணி மற்றும் தூர்வாரும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பருவமழைக்கு முன்பாக...

ஆய்வுகளின்போது, வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாகவே விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளவும், முழுமையாக இப்பணிகளை முடிக்ககூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அனைத்துத் துறை அதிகாரிகளும் அளித்திடவேண்டும் என்றும் அவர் அப்போது உத்தரவிட்டார்.இந்த ஆய்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளர் தீரஜ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com