விரைவு பேருந்துகளில் பயணிகளுக்கு குடிநீர்: டெண்டர் கோரியது அரசு போக்குவரத்து கழகம்

1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தொலைதூர பயணங்களுக்கு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு, சேலம் என பல்வேறு நகரங்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பேருந்து பயணத்தின் போது குடிநீர் தேவைப்பட்டால் பயணிகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் இ-டெண்டர் மூலம் விண்ணப்பங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






