

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிராஜ் (வயது 32). ஓட்டுநரான இவருக்கு ஜெசி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாண்டிராஜ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 10-ம் தேதி தம்பதியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டிராஜ், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டிராஜ், கடந்த 12ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டிராஜின் சகோதரர் பாலசிங் சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.