செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்

அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்
Published on

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடுமலை கிளையிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு தரப்பினர் அன்றாட அத்தியாவசிய தேவையை நாள்தோறும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சாணியாக விளங்குகின்ற அரசு பஸ் டிரைவர் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக பஸ் ஓட்டி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பஸ் டிரைவர் ஒரு கையில் செல்போன் பேசிக்கொண்டு மற்றொரு கையில் பஸ்சை இயக்கி உள்ளார்.

இதனை பஸ்சில் பயண செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை முன் உதாரணமாகக் கொண்டு அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அத்துடன் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com