காஞ்சீபுரத்தில் கல்லால் தாக்கி டிரைவர் கொலை

காஞ்சீபுரத்தில் கல்லால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரத்தில் கல்லால் தாக்கி டிரைவர் கொலை
Published on

காஞ்சீபுரம் பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயுப்கான் (வயது 56) இவரது மனைவி ராபியாபி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அயுப்கான் ரங்கசாமிகுளம் அருகே உள்ள வேன் தொழிற்சங்கத்தில் கூலி அடிப்படையில் வேன் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று ரம்ஜான் என்பதால் நேற்று முன்தினம் இரவு அவரது வேன் உரிமையாளர், அயுப்கானிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்ததாகவும், வெளியூர் சவாரி சென்று வந்த கூலி என ரூ.3 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கம் போல் சவாரி முடித்துவிட்டு நள்ளிரவு மது குடிப்பதற்காக தனது தொழிற்சங்கத்தின் அருகே உள்ள அம்மா உணவகத்தின் வாசலில் வேனை நிறுத்திவிட்டு அதன் அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அயுப்கானை செங்கற்களால் தாக்கியுள்ளனர்.

அங்கிருந்து அயுப்கான் தப்பிச்சென்று ரங்கசாமிகுளம் வளைவு சந்திப்பின் அருகே ஓடிய நிலையிலும் அவரை விடாத மர்ம நபர்கள் மீண்டும் அவரை கற்களாலும், கை, கால்களால் உதைத்தும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விஷ்ணு காஞ்சீபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்றது.

மேலும் போலீசார் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அயுப்கானை கொலை செய்த குற்றவாளிகள் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சேக்குபேட்டை நடுத்தெருவை சேர்ந்த பிரதீப் குமார் (25) என்பதும் மற்றொருவர் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிவாசன் மற்றும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், அயுப்கான் மது குடிக்கும் இடத்தில் இவர்கள் இருவரும் மது குடித்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 பேரும் சேர்ந்து அயுப்கானை கல்லால் தாக்கி படுகொலை செய்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com