

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவையில் உள்ள காரைக்காலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பாதுகாக்கப்பட்ட வான்வெளியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே, திடீரென ஒரு ட்ரோன் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி பறந்து வந்தது. அமைச்சர் அமித்ஷா மேடையில் இருந்தபோது, இந்த ட்ரோன் பறந்து வருவதைக் கண்ட கமாண்டோக்கள் உடனடியாக செயல்பட்டனர். ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியைப் பயன்படுத்தி, அந்த ட்ரோனை அவர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ட்ரோனை இயக்கிய நபரை போலீசார் உடனடியாகக் கண்டறிந்து பிடித்தனர். விசாரணையில் அவர் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள கடை ஒன்றில் அவர் வேலை செய்து வருவதும், தடை உத்தரவை மீறி ட்ரோனை இயக்கியதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. லோகேஷ் எதற்காக ட்ரோனைப் பறக்கவிட்டார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.