

சென்னை,
சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பணியாளர்கள், சென்னை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை இன்று ஏற்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங், (சுகாதாரம்), செ.சரவணன், (பணிகள்) உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், சென்னை பள்ளிகளின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றனர்.
மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்த அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 81 சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இன்று “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதை பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.