மதுபோதையில் லாரி ஓட்டி காரில் வந்த 3 பேருக்கு காயம்: டிரைவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் லாரி ஓட்டி காரில் வந்த 3 பேருக்கு காயம்: டிரைவர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் கடந்த 20.1.2026 அன்று கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இர்பானுல்லாபெக் (வயது 35) என்பவர் மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் காரில் வந்த 3 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்தியதால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்காக பதிவு செய்து இர்பானுல்லாபெக்கை போலீசார் கைது செய்தனர்.

அதன்படி வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் காயம் ஏற்படுத்தினால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்குப்பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.

அதே போன்று வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலை அல்லாத மரணம் வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறான குற்றத்திற்கு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com