தொடர் மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது

தொடர் கனமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
தொடர் மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது
Published on

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. இதனால் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. எனவே கடந்த 9-ந்தேதி உபரிநீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவிலும் பலத்த மழை பெய்தது. நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். மழை நீர் வரத்தால் அந்த அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கடந்த மாதம் 28-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடி விதம் நீர் திறக்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுக்காதது, பூண்டி ஏரியில் இருந்து திருந்து விடப்படும் நீர் கடலில் போய் வீணாக கலப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்றுமுன் தினம் இரவு முதல் குறைக்கப்பட்டு வினாடிக்கு 1,300 கனஅடி விதம் திறந்து விடப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.10 அடியாக பதிவாகி உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக இருந்தது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com