வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

அக்னி நட்சத்திரம் விடை பெற்ற பின்னரும், சென்னையில் தொடர்ந்து வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலைகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் இளைப்பாறுவதற்காக தஞ்சம் அடைகின்றனர். வெயில் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பள்ளிப்பட்டு, குழித்துறையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, திருத்தணி, தக்கலையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தியை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வீசும் அனல் காற்றே, சென்னையில் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம்.

மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com