மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை தீ விபத்து; மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று (மே18) அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை தீ விபத்து; மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மேட்டூர்

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இன்று அதிகாலை முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும் ஊழியர்களும் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக,உலைகளுக்கு செல்லும் நிலக்கரி தடைபட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக, முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வுக்குப் பிறகு சேதத்தின் முழு விபரம் தெரியவரும்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இதே போல் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com