இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளுக்கு..முன்விடுதலை வழங்க வேண்டும் - வேல்முருகன்

மனிதாபிமான அடிப்படையில் விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
வேல்முருகன்
Published on

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நிரந்தர முன்விடுதலை

தமிழகச் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையிலான நிரந்தர முன்விடுதலை வழங்க வேண்டும்.

“தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்துவிட்ட தமிழகச் சிறைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், தற்போது முதுமை மற்றும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவின் பேரில் பரோல் விடுப்பில் இருந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இவர்கள், பரோல் காலம் முடிந்ததால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசின் தொடர்ச்சியான தாமதம் மற்றும் நிர்வாக அலட்சியம் இவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.

மே 29-ம் தேதி பரோல் விடுதலைக்கான கோப்புகளில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோரிக்கை

தமிழக முதல்-அமைச்சர் இது குறித்து உடனடியாகப் பரிசீலனை செய்து, விடுதலைக்கான நடைமுறைகள் முடியும் வரை மீண்டும் நீண்டகால பரோல் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தின் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர முன்விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com