தொடர் விடுமுறை எதிரொலி.. தாம்பரம் ரெயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்


தொடர் விடுமுறை எதிரொலி.. தாம்பரம் ரெயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x

கோப்புப்படம்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் நாளை ஆயுத பூஜையும், நாளை மறுதினம் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் வார விடுமுறையும் வருவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று 885 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்று 185 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் தொடர் விடுமுறையையொட்டி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது. இதன்படி இன்று மாலை 4.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில், நாளை அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு பகுதிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்றிரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் அக்டோபர் 5ஆம் தேதி இயக்கப்படுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் புறப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை இந்த ரெயில் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவு இல்லாத மெமு விரைவு சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்றிரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் விடுமுறையால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் மக்கள் முண்டியடித்து ஏறி வருகின்றனர்.

1 More update

Next Story