

சென்னை,
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த வருடம் ஆகஸ்டு 7ந்தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 6ந்தேதி ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பொது செயலாளர் க. அன்பழகன் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், கட்சியின் சட்டதிட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதேபோன்று கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது.
இதனிடையே, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு அக்டோபர் 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனை முன்னிட்டு அக்டோபர் 6ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.