அ.தி.மு.க.வின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி - கே.சி.பழனிசாமி விமர்சனம்

அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விடம் ஒப்படைத்துவிட்டார் என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னையும் தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பினாமிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக 1972-ல் துவக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் திராவிட சித்தாந்தங்களில் பயணித்த அ.தி.மு.க.வை ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விடம் ஒப்படைத்துவிட்டார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அமைப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கூட்டணி ஆட்சி என்பது 1980லேயே காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வால் முயற்சிக்கப்பட்டு தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.

அதேபோல ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாக்கப்பட வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பாமல், தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இந்த கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தன் சுயநலத்திற்காக அ.தி.மு.க.வின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார். இன்றைய நாள் அ.தி.மு.க. வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

"மோடியா? லேடியா?" என்று கேட்ட ஜெயலலிதாவின் ஆன்மா, "சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்" என்ற எம்.ஜி.ஆரின் ஆன்மா மற்றும் இவர்கள் வழி வந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த மாபெரும் தவறை செய்த எடப்பாடி பழனிசாமியை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com