பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து கூறியதாவது:-

திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 22,455 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 19 திருக்கோவில்களில் மருத்துவமனைகள் தொடங்கியுள்ளோம். 1,000 ஆண்டுகளுக்கு முன்பே கோவில்களில் கல்விச்சாலையும், மருத்துவ சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகம் கோவில் கட்டடக்கலையை கொண்டு கட்டிக்கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு 2,500 பேர் படிக்கின்றனர்; சோழர்கள் காலத்தின் கூட கோயில் சார்பில் கல்விச் சாலைகள் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அறப்பணியுடன், அறியாமையை நீக்கும் கல்வி பணியையும் செயல்படுத்தி வருகிறது.

"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன, இதுவும் சதிச் செயலா?. அதிமுக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது. ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அறநிலையத்துறையை விமர்சித்துள்ளார். பாஜகவின் ஊதுகுழலாக இருந்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி; திட்டமிட்டு விஷ விதைகளை பரப்புகிறார். சங்க பரிவாரங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என பழனிசாமி பேசுகிறார். பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்கி வருகிறது. 2026-க்கு பிறகு அதிமுகவை தேடுகின்ற சூழல் தமிழ்நாட்டில் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com