

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகாவுக்கு 5 தொகுதிகள், இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 1 தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று மயிலாப்பூரில் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்து வருகிறார். அவருடன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பரப்புரையில் பங்கேற்றுள்ளார்.