

பழனி,
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏரா ளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வருகை தருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோர் நேற்று மாலை பழனிக்கு வந்தனர்.
அவர்கள் அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக் கோவில் சென்றனர். அங்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, 2 பேரும் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து போகர் சன்னதி, கைலாசநாதர் சன்னதியிலும் தரிசனம் செய்தனர். இதேபோல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.