

சிவகங்கை,
தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
சிவகங்கை நகரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹர்ஷித் ராஜலிங்கம், பொதுத்தேர்வு நேரத்தில் அவரது தந்தை செந்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தை இறந்த நிலையிலும் மனம் தளராமல் ஹர்ஷித் ராஜலிங்கம் தேர்வு எழுதினார்.
தற்போது வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் ஹர்ஷித் ராஜலிங்கம் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தமிழ் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தந்தை செந்தில் காலமானார். கண்ணீரை துடைத்துக்கொண்டு தேர்வு எழுதிய ஹர்ஷித், தமிழில் 99 மதிப்பெண்கள் எடுத்து சதனை படைத்துள்ளார்.
தந்தை இழந்த துயரத்திலும் ஹர்ஷித் ராஜலிங்கம் படைத்த இந்த சாதனை, அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அந்த பகுதியையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.