நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மீண்டும் புதிய உச்சம்.!

சமீப நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
சமீப நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 625 காசுகளாக இருந்து வந்தது.
இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 630 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.
முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவை அதிகரிப்பு காரணமாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை முட்டை கொள்முதல் விலை அதிகரித்து காணப்படும் என்றும், அதன் பின்னர் விலை குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முட்டை கொள்முதல் விலை 695 காசுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






