

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 5 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதியவரான சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் தங்கையாதவமணி(எ) ஞானதுரை (வயது 67) என்பவரை சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (16.9.2026) மேற்சொன்ன முதியவர் தங்கையாதவமணி(எ) ஞானதுரை என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.