சென்னையில் பேருந்து மோதி மூதாட்டி பலி: ஓட்டுநர் கைது

மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து மோதி மூதாட்டி பலி.
மூதாட்டியை மோதிய பேருந்து
Published on

சென்னை,

சென்னை சூளை ரவுண்டானா அருகே மாநகரப் பேருந்து மோதிய விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்து மோதி விபத்து

சென்னை பெரியமேடு கண்ணப்பர் திடல் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 70). இவர் சூளை ரவுண்டானா அருகே உள்ள டெமலோஸ் சாலையில் நடைபாதையில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, இவர் சூளை ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, புத்தாகரத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தடம் எண் 242பி (பிராட்வே - செங்குன்றம்) மாநகரப் பேருந்து , எதிர்பாராதவிதமாக மூதாட்டி சாவித்திரி மீது பலமாக மோதியது.

மூதாட்டி பலி- போலீசார் விசாரணை

இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சேகர் (வயது 42) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com