

கோவை,
கோவையில் நடுரோட்டில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் பறித்து வந்த பாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு பாட்டி சுற்றித் திரிந்தார். அவர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து தனக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டது போலக் கைகால்களை உதறி நடித்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் ஓடிவந்து அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். பின்னர், மருத்துவச் செலவிற்காகப் பரிதாபப்பட்டுத் தங்களால் இயன்ற பணத்தையும் அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பாட்டி இதே பாணியில் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நாடகமாடிப் பணம் பறிப்பதைச் சில பொதுமக்கள் கவனித்துள்ளனர். திரைப்படப் பாணியில் மக்களை ஏமாற்றி வந்த அந்தப் பாட்டியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளைப் பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்தப் பாட்டியின் "ஆக்டிங்" வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த அந்த மர்ம பாட்டி யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், வைரல் வீடியோ ஆதாரங்களை வைத்துக் கொண்டு அந்தப் பாட்டியை தேடி வருகின்றனர். சாலையில் யாராவது ஆபத்தில் இருந்தால் உதவுவது நல்லது என்றாலும், இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.