

கையெழுத்து
தேர்தல் தொடர்பான சேவைகள் அனைத்தும் வாக்காளர்களை விரைவாகச் சென்றடைய ஏதுவாகவும், முதல்முறை வாக்களிக்கும் புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக தபால் துறையின் மூலம் வாக்காளர்களின் வீடுகளுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைப்பதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் சென்னை தலைமை தபால்துறை தலைவர் ஜே.சாருகேசி ஆகியோருக்கு இடையே நேற்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
விரைவு தபால்
அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி
தமிழகத்தில் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் புதிய வாக்காளர்களுக்கு இலவசமாக வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு தபால் துறையுடன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டையை தபால் துறை இலவசமாக விரைவு அஞ்சல் மூலம் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும்.
தமிழகத்தில் இதுவரை 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் முதல் வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டம் மூலம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்.
தேர்தல் தேதி
தமிழக சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையமே அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.