

கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்ற காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.பி. வேலுமணி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது அவர் தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை எஸ்.பி. வேலுமணி பிரசாரத்திற்கு சென்றபோது, கோவை பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை வழிமறித்து சோதனையிட்டனர். காரில் இருந்து கீழே இறங்கிய எஸ்.பி.வேலுமணி அதிகாரிகள் தமது காரை சோதனையிட ஒத்துழைப்பு அளித்தார். சோதனை முடிந்த பின்னர் பிரசார பணிக்காக எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.