தமிழ்நாடு வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

விருதுநகர் காரியாப்பட்டி அருகே ரங்கசாமியின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தமிழ்நாடு வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
Published on

புதுவையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அங்கு ஆளும் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான திமுக -காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி பங்கீடு நிறைவு பெறாததால், அரசியல் களம் அனல் பறக்கிறது. லாட்டரி தொழிலதிபர் மார்டினின் மகனின் லட்சிய ஜனநாயகக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதால் என்.ஆர் காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

முதல்வர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று புதுச்சேரிக்கு சென்றார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த சந்திப்பை தவிர்ப்பதற்காக ரங்கசாமி, அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மதுரைக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து அவர் திருச்செந்தூர் சென்று முருகன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக விருதுநகர் காரியாப்பட்டி அருகே ரங்கசாமியின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். காரை முழுமையாக சோதனை செய்ததுடன், முதல்வரின் அடையாள அட்டை, சூட்கேஸ் மற்றும் பிற பொருட்களையும் சோதனையிட்டனர். சோதனையை சிறிது நேரத்தில் முடித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com