

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றுமு் ரூ.50 ஆயிரம் மேல் ரொக்க பணம் கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கரூவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு, விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 48 பறக்கும் படை மற்றும் நிலையான 48 கண்காணிப்பு குழுவினர் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, நேற்று வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்க பணம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ரூ.94 ஆயிரத்து 500, பெரம்பூர் தொகுதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம், துறைமுகம் தொகுதியில் ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் என மொத்தம் ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 100 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.