தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை - சென்னையில் பறக்கும் படை வாகனங்களின் செயல்பாடு தொடக்கம்

128 வாகனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்திலிருந்து புறப்பட்டு பணியை தொடங்கின.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை - சென்னையில் பறக்கும் படை வாகனங்களின் செயல்பாடு தொடக்கம்
Published on

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்திய தேர்தல் ஆணையத்தால், இன்று (15.03.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் - 2026ற்கான தேர்தல் அட்டவணை வெளியிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரப்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு வீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்று உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளான டாக்டர்.இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர் (தனி), எழும்பூர் (தனி), இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகியவற்றில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 2 வீடியோ கண்காணிப்புக் குழு என ஒவ்வொரு தொகுதிக்கும் 8 வாகனங்கள் வீதம் 16 தொகுதிகளிலும் 128 வாகனங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு தினசரி 3 சுழற்சி முறையிலும், வீடியோ கண்காணிப்புக் குழு தினசரி 2 சுழற்சி முறையிலும் தனது பணியினை மேற்கொள்ளும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவின் ஒவ்வொரு வாகனத்திலும் நிர்வாக நடுவர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர், காவலர், ஆயுதம் தாங்கிய காவலர் மற்றும் ஒரு வீடியோகிராபர் இருப்பார்கள். வீடியோ கண்காணிப்புக் குழுவில் நிர்வாக நடுவர் நிலை அலுவலர் மற்றும் வீடியோ கிராபர் இருப்பார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் தொடர்பான அனைத்து புகார்கள்;(ஆ) அச்சுறுத்தல், மிரட்டல், சமூக விரோத கூறுகளின் இயக்கம், மதுபானம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்திற்காக பெரும் தொகை போன்ற அனைத்து புகார்கள்; (இ) வேட்பாளர்கள் / அரசியல் கட்சியால் செய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் செலவுகள் தொடர்பான அனைத்து புகார்கள்: (ஈ) தேர்தல் அறிவிப்பு வெளியான முதல் வீடியோ கண்காணிப்புக் குழு (VST) உதவியுடன் வீடியோகிராஃப், அனைத்து முக்கிய பேரணிகள், பொதுக் கூட்டங்கள் அல்லது அரசியல் கட்சிகளால் செய்யப்பட்ட பிற முக்கிய செலவுகள் அனைத்தையும் கண்காணித்து அறிக்கை அனுப்புதல் பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த குழு சட்டவிரோதமான மதுபானம், லஞ்சம் அல்லது பெரிய அளவிலான பணம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் அவர்களின் பகுதியில் உள்ள சமூக விரோத கூறுகளின் இயக்கம் ஆகியவற்றை கண்காணிப்பர்.

மாவட்ட எல்லை அல்லது வேறு ஏதேனும் இடத்தின் எல்லைகளில் சோதனை சாவடி அமைத்திருந்தாலும், அவற்றிற்கு அருகமையிலேயே உள்ள எல்லையில் S.S.T. குழு தனது பணியினை மேற்கொள்ளும். பணம் அல்லது லஞ்சம் பொருட்கள் S.S.T. குழுவினரால் சோதனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒற்றைச்சாரள முறையில் (Single Window System) அனுமதி பெற்ற பொதுக்கூட்டம் / பிரச்சாரம் / பேரணிகளை வீடியோ பதிவு மேற்கொள்ளும். அனுமதி பெறாத கூட்டங்கள் / வாகனங்கள் / பிரச்சாரங்கள் கண்டறியப்படும் பட்சத்தில் கொடி, தோரணம், பிரச்சார பொருட்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திடும். முழுமையையும் வீடியோ பதிவு செய்யும் பணி மேற்கொள்ளும்.

சென்னை மாவட்ட தேர்தல் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் அளித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7012 அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com