

சென்னை,
சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அதிகம் பயன்படுத்துவது ரெயில் போக்குவரத்தை தான். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து குறிப்பிட்ட இடத்துக்கு சரியான நேரத்தில் செல்ல உதவியாக இருப்பது மின்சார ரெயில்கள் தான். ஒரு நாள் மின் சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் சென்னையே ஸ்தம்பித்து விடும்.
இந்நிலையில், சென்னை கிண்டி அருகே ரெயில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழித்தடத்தில் மாலை 5 முதல் 6 மணி அளவில் சுமார் 50 ஆயிரம் பேர் பயணிப்பர் என சொல்லப்படுகிறது.
ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், சென்னை ரெயில் நிலையங்களில் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலையில், ரெயில் சேவை சுமார் 40 நிமிடத்திற்கு பின்னர் சீரானதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.