மின்சார கணக்கீட்டை தோராயமாக பதியக்கூடாது - மின்வாரிய ஊழியர்களுக்கு அரசு உத்தரவு

உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.
மின்சார கணக்கீட்டை தோராயமாக பதியக்கூடாது - மின்வாரிய ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
Published on

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுபாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்த பட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும்.

உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம். மேற்படி குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com