

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கோட்டத்தில் காஞ்சீபுரம் மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் தக்கோலம்-அரக்கோணம் இடையே 9.5 கி.மீ. தூரத்துக்கு இறுதிகட்ட மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஐ.என்.எஸ். ராஜாளி கப்பற்படை தளம் அருகே வழித்தடத்தை மாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் முழுமையான வைப்பு தொகையாக ரூ.54.57 கோடி ரெயில்வேக்கு வழங்கியுள்ளது.
அரக்கோணம்-ஒச்சேரி நெடுஞ்சாலையில் லெவல் கிராசிங் அமைப்பது தொடர்பான விவகாரம் மாநில அரசின் கையில் உள்ளது. மேலும் தடையில்லா சான்றுக்கும் காத்திருக்கிறோம். அரக்கோணம்-காஞ்சீபுரம் இடையேயான இறுதிக்கட்ட மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர்-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை சென்டிரல் வழித்தடம் போக்குவரத்துக்காக நிறுவப்பட உள்ளது.
இந்தநிலையில் தக்கோலம்-அரக்கோணம் இடையேயான மின்மயமாக்கல் பணிகளை தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் திட்டத்தின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி, தலைமை நிர்வாக அதிகாரி எல்.சுதாகர் ராவ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகள் குறித்து ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மேம்படுத்துவதற்கான பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவடைந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.