நாட்டு வெடியை கடித்த குட்டி யானை உயிரிழப்பு: விவசாயி கைது

குத்தியாலத்தூர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட குத்தியாலத்தூர் வனப்பகுதியில் கடம்பூர் வனச்சரக வனப்பணியாளர்கள் கடந்த 10-ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து கடம்பூர் வனச்சரக அலுவலர் சிவசங்கரனுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் வனக்கால்நடை உதவி டாக்டர் சதாசிவத்துடன் அங்கு சென்றார். பின்னர் கால்நடை டாக்டர் இறந்து கிடந்த குட்டி யானைக்கு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். இதில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி) வெடித்ததில் 1½ வயது பெண் குட்டி யானை இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘கடம்பூர் அருகே உள்ள தொண்டூர் பகுதியை சேர்ந்த விவசாயியான காளிமுத்து (வயது 43) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். அதேபோல் அவர் சம்பவத்தன்று விலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடியை கடித்த குட்டி யானை உயிரிழந்தது’ என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.






