விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தது.
விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
Published on

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தது.

மலைப்பகுதி

வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா, புலி என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது இந்த பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கன்சாபுரம், அத்திகோவில் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தென்னை மரங்கள் சேதம்

அதிலும் குறிப்பாக இந்த பகுதியில் தென்னை பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் அடிக்கடி நுழைந்து தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு அத்திகோவில் பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோப்பிற்குள் புகுந்து தோப்பில் உள்ள தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியது. தென்னை குருத்துகளை மட்டுமே சாப்பிட்டு விட்டு சென்ற யானைகள் சமீப காலமாக மரங்களை வேரோடு பிடுங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சோலார் மின்வேலி

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆதலால் இலவசமாக சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com