

அகரம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பணை கட்டவேண்டும் என அணைக்கட்டு தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நிலம் அளக்க வருவதில்லை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள்கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சுதா, தலைமை இடத்து துணை தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நில அளவையர் சதீஷ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கோவிந்தரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ரெட்டியார் பேசும் போது நிலம் அளக்க, பணம் கட்டி நான்கு மாதங்கள் ஆனாலும் நிலத்தை அளக்க நில அளவையர்கள் வருவதில்லை. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நிலங்களை அளக்க முடியாமல் உள்ளனர். நிலத்தை அளக்க தாசில்தார் உத்தரவிட வேண்டும்.
நிலக்கடலை அறுவடைக்கு நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களை அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதியிலுள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வரவழைக்க வேண்டும். தேவைப்படும் விவசாயிகள் அந்த எந்திரத்தைக் கொண்டு நிலக்கடலை அறுவடை செய்து கொள்ளலாம். அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியை பயன்படுத்த வேண்டும் என்றார்.
தடுப்பணை கட்ட வேண்டும்
மேலும் விவசாயிகள் பேசுகையில் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்துள்ளார்கள். மழையால் பயிர்கள் சேதம் அடைந்து விட்டது. இதற்கான காப்பீட்டு தொகையை அரசு வழங்காமல் காலம் கடத்தி வருகின்றது. காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்டும்.
அகரம் ஆற்றில் மேலரசம்பட்டில் இருந்து வெட்டுவாணம் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை மீட்டு தடுப்பணை கட்ட வேண்டும். பீஞ்ச மந்தை ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும். பீஞ்ச மந்தை அங்கன்வாடி மையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் சமையல் கூடத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக ரேஷன் கடைக்கு தனியாக கட்டிடம் கட்ட வேண்டும்.
மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் ஒத்தையடி பாதையாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. எனவே மண் சாலை அமைக்க, மண் எடுக்க வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். 10 ஆயிரம் விவசாயிகள் உள்ள ஒரு பகுதியில் 1,500 விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆகவே விவசாயிகளுக்கு முதுகெலும்பாக செயல்படும் கூட்டுறவு சங்கங்களை வலிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தாசில்தார் ரமேஷ், விவசாயிகள் வைத்த கோரிக்கையை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி தீர்வுகாண வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.