

கணஞ்சாம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
ஆக்கிரமிப்பு
வெம்பக்கோட்டை யூனியன் கணஞ்சாம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடைக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளதால் அதனை அகற்றி பொதுமக்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மணிமண்டபம்
தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத்ராஜா மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் நகராட்சி பூங்கா அருகில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் உள்ளது. இந்த மண்டபம் முறையாக வடிவமைக்கப்படாததால் மழை நீர் மண்டபத்தில் தேங்கி நிற்கும் நிலையில் நடக்க முடியாத நிலை உள்ளது.
பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் மண்டபத்தில் சங்கரலிங்கனார் சிலை அருகிலேயே நகராட்சி பூங்காவை தூய்மைப்படுத்துவதற்கான மண்வெட்டி போன்ற உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தெருநாய்கள் மண்டபத்திற்குள் நுழைந்து அசுத்தப்படுத்தி விடுகிறது. எனவே இந்த மண்டபத்தை முறையாக பராமரிக்கவும், பணியாளர்களை நியமித்து இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமனம்
வம்பக்கோட்டை யூனியன் அலமேலு மங்கைபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் தலைமையாசிரியை மற்றும் ஒரு ஆசிரியை மட்டுமே பணியாற்றி வரும் நிலையில் கற்றல் பணியில் சிரமம் ஏற்படுகிறது.
ஆதலால் நிரந்தரமாக ஒரு ஆசிரியரை நியமிக்கவும் அதுவரை மாற்றுப்பணியில் ஒருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.