

சென்னை,
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வரும் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் வரும் 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்வு முன்கூட்டியே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறை அட்டவணையை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து 4, 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 6-ந்தேதியில் இருந்தும், 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு வருகிற 8-ந்தேதியில் இருந்தும் ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தமாக வருகிற 16-ந்தேதிக்குள் தேர்வை முடிக்க ஏதுவாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஆண்டு இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட இருக்கிறது. தேர்வு முடிந்ததும் 17-ந்தேதியில் இருந்து மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை தொடங்கும் எனவும், ஆனால் ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதிநாள் வரை பணிக்கு வர அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும். விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை ஜூன் 4-ம் தேதி திறப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.