

சென்னை,
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை குறித்து செய்தி வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறை தங்கள் கடமையை செய்துள்ளது. முறைகேடாக மதுபான பார்கள் செயல்பட அனுமதி அளித்ததன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக பணம் சென்றதாக புகார் உள்ளது.
செந்தில் பாலாஜி உத்தமர் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு. செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் புதிய வழக்கு அல்ல; 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு.
மனித உரிமை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது. ஆவணங்களை கொடுப்பேன் என செந்தில் பாலாஜி கூறியவர் அதனை வழங்க வேண்டியது தானே. செந்தில் பாலாஜி கைதால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதறிப் போய் உள்ளனர். தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழகத்திற்கே தலைகுனிவு. விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் செந்தில் பாலாஜி நாடகத்தை அரங்கேற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.