

சென்னை,
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை, தேசிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு என மத்திய அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இந்த சூழலில், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மில்லியன் டாலர் வினாக்களை எழுப்புகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், மதுபானங்கள் வைப்பு மையம், முன்னாள் மதுவிலக்கு இணை கமிஷனர் வீடு என அரசு அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு, மிரட்டும் செயலில் ஈடுபட்டதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. வழக்கு தொடர்பான விசாரணை எல்லையை தாண்டி, உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்துக்கும் ஆளாக்கி வரும் அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.