முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் இல்லங்களில் அமலாக்கத்துறை ரெய்டு - இந்திய கம்யூ. கண்டனம்

எந்த பாஜக தலைவர்கள் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்படுவதில்லை என மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் இல்லங்களில் அமலாக்கத்துறை ரெய்டு - இந்திய கம்யூ. கண்டனம்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி தோழர் பினராயி விஜயனின் திருவனத்தபுரம் வாடகை வீட்டிலும், கண்ணூரில் உள்ள சொந்த வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டுகளை மேற்கொண்டுள்ளது.

அரசியல் நோக்கத்துடன் கூடிய இந்த ரெய்டுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியாவை பாசிசத்தை நோக்கித் தள்ளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் மத்திய பாஜக அரசு, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமானவரித்துறை, நீதி மன்றங்கள் போன்றவற்றை தனது அரசியல் நோக்கங்களுடன் கூடிய தனது கட்டளைகளுக்கு அடிபணியும் அமைப்புகளாக மாற்றியுள்ளது.

அந்த அமைப்புகளை எதிர்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், மிரட்டி - உருட்டி பணியவைக்கும் நோக்குடன் மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது. அதே சமயம் எந்த பாஜக தலைவர்கள் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்படுவதில்லை. ரெய்டுகளுக்கு உள்ளான எதிர்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் அவர்கள் மீது எந்த தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை.

மத்திய அரசின் இத்தையப் போக்கு நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் விழுமியங்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.

மத்திய அரசின் இத்தகைய போக்கையும், கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பினராய் விஜயனின் இல்லங்கள் மீதான அமலாக்கத் துறையின் ரெயிடுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com