தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை: ஒரே வாரத்தில் 255 பேர் கைது - 517 கிலோ கஞ்சா பறிமுதல்

இதன் முக்கிய நோக்கம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முறியடித்து, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மாநிலம் முழுவதும் கிடைப்பதை முற்றிலுமாக ஒழிப்பதாகும்.
கைது
Published on

சென்னை,

காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனையைத் தடுக்கும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், அறிவுறுத்தலின்படி, 08.07.2026 முதல் 08.08.2026 வரை ஒரு மாத காலத்திற்கு மாநிலம் முழுவதும் சிறப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முறியடித்து, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மாநிலம் முழுவதும் கிடைப்பதை முற்றிலுமாக ஒழிப்பதாகும்.

இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர வாகனச் சோதனைகள், திடீர் சோதனைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நுண்ணறிவு தகவல் அடிப்படையிலான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத கடத்தல், பதுக்கல், விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். 20.07.2026 முதல் 25.07.2026 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகள்:

அமலாக்க நடவடிக்கைகளின் முடிவுகள்

* NDPS சட்டத்தின் கீழ் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

* 255 பேர் கைது செய்யப்பட்டனர்.

* பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்:

கஞ்சா - 517 கிலோ, கஞ்சா சாக்லேட் -15.000 கிலோ, எம்.டி.எம்.ஏ, (MDMA) - 69 கிராம், மெத்தாம்பெட்டமைன் - 146.6 கிராம், ஹெராயின் -1.45 கிராம், அபின் - 17 கிராம், பல்வேறு வகையான போதை மாத்திரைகள் - 7,552. மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக 486 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 5,237.031 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்கண்ட அனைத்து வழக்குகளும் போதைப்பொருள் மற்றும் மனமயக்கும் பொருட்கள் சட்டம், 1985 (NDPS Act), சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குமுறை) சட்டம், 2003 (COTPA) மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க, நுண்ணறிவு தகவல் அடிப்படையிலான தொடர் அமலாக்கம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று உறுதியளிக்கிறது.

போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

போதைப்பொருட்களின் பரவலை ஆய்வு செய்யும் நோக்கில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.

கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP), Enforcement Bureau CID வியாசர்பாடி, கமலாபுரம்.

காவல்துறை தலைவர் (குற்றம்) (IGP), Crime - கண்ணகி நகர்.

காவல்துறை துணைத் தலைவர் (DIG), Enforcement குப்பம். பெசன்ட் நகர், ஊரூர்

காவல் கண்காணிப்பாளர் (SP), NIB CID - டி.பி. சத்திரம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு.

இந்தப் பகுதிகளில் போதைப்பொருட்களின் சட்டவிரோத விற்பனை குறித்து பொதுமக்களிடம் விசாரித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

கண்டறியப்பட்ட முக்கிய வழக்குகள்

21.07.2026 அன்று, திருச்சிராப்பள்ளி மாநகரம், கோட்டை காவல் நிலையத்தில், திருச்சியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நபர்களிடமிருந்து 988 டேபென்டடால் (Tapentadol) மாத்திரைகள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1. சஞ்சய் (26), த/பெ. சக்திவேல்

2. அண்ணாமலை (22), த/பெ. துரைசிங்

3. காளிமுத்து (19), த/பெ. சண்முகம்

அதேபோல், மதுரை மாநகரம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் கீழ்க்கண்ட நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1,348 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1. ஆகாஷ் (24), த/பெ. முத்துராஜா

2. விஸ்வ வினித் (21), த/பெ. முருகன்

3. ராமன் (22), த/பெ. முத்துக்குமார்

4. அஜித் (20), த/பெ. முருகன்

முக்கிய கைது நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்ட வழக்கு

23.07.2026 அன்று, சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவால் மார்ச் 2026-இல் பதிவு செய்யப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த பாரத் என்ற பரத்குமார் கைது செய்யப்பட்டார்.

24.07.2026 அன்று, கோயம்புத்தூர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவால் டிசம்பர் 2025-இல் பதிவு செய்யப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அல்லாபிச்சை (த/பெ. அப்துல் காதர்) கைது செய்யப்பட்டார்.

மேலும், 2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு நைஜீரிய நாட்டினர்கள், தங்களது சிறைத் தண்டனையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, சட்டப்படி தேவையான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பொதுமக்களுக்கு காவல்துறையின் வேண்டுகோள்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில், போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத கடத்தல், பதுக்கல், விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மொபைல் செயலி: Drug Free TN

இலவச உதவி எண்: 10581

வாட்ஸ்அப் எண்: 94981 10581

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு நம்பகமான தகவலும் முழுமையான ரகசியத்துடன் கையாளப்பட்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

"போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com