பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்


பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 July 2025 9:17 AM IST (Updated: 7 July 2025 11:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

சென்னை,

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் இன்று தொடங்குகிறது. இதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு 7.5 விழுக்காட்டின் கீழ் 51,004 பேர் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்திருந்தார்கள்.

இதில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும். இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழுள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று (ஜூலை 7ம் தேதி) மற்றும் நாளை (8-ம் தேதி) நடைபெற உள்ளது.

பொது பிரிவினருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆன்லைன் கலந்தாய்வு மற்றும் அது தொடர்பான விவரங்களை அறிய www.tneaonline.org என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்வையிடலாம்.

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டு 64 மாணவர்கள் 200 கலந்தாய்வு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 144 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

1 More update

Next Story