சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்

49வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன. வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children's Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தகக்காட்சி மைதானம் முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.






