

ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக பவானிசாகர் அணை மற்றும் பூங்கா உள்ளது. இதில் பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18-ந்தேதி அதாவது ஆடிப்பெருக்கு தினத்தில் மட்டும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப்பெருக்கு அன்றும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் பூங்காவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட ஊஞ்சல், படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. எனவே ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அணையின் முன்பு உள்ள பூங்காவில் பண்டிகையை கொண்டாடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.