சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக்கோரிய வழக்கு 6 வாரங்களுக்கு தள்ளிவைப்பு; ஐகோர்ட்டு உத்தரவு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக்கோரிய வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக்கோரிய வழக்கு 6 வாரங்களுக்கு தள்ளிவைப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக்கோரி சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து மறு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது. எனவே, இந்த வழக்குகளையும் தள்ளிவைக்க வேண்டும். இதே கோரிக்கையுடன் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் 2 வழக்குகளையும் இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளையும், இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com