ரஸ்தாகாடு கடற்கரையில் 3,006 பானைகளுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

பொங்கலிட்ட பெண்களுக்கு கரும்பு, சேலை வழங்கப்பட்டது.
ரஸ்தாகாடு கடற்கரையில் 3,006 பானைகளுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா
Published on

குமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தா காடு கடற்கரையில் பிரம்மாண்ட பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் முதன் முறையாக 3006 பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தொழில் அதிபர் ஜாண்சன், சாமிதோப்பு அன்புவனம் பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி நகராட்சி தலைவர் ஸ்டீபன் வரவேற்று பேசினார். விழாவை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். நடிகை தேவயானி குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் அமெரிக்கா போன்ற வெளிநாட்டினரும் பங்கேற்று பொங்கல் பண்டிகையை கண்டு ரசித்தனர். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பொங்கலிட்ட பெண்களுக்கு கரும்பு, சேலை வழங்கப்பட்டது. முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியபோது, "மகாபாரதத்திலும் சரி, ராமாயணத்திலும் சரி சூழ்ச்சி தான் நடந்தது. இதே போல தற்போதும் நம்மையெல்லாம், நம் மக்களையெல்லாம் பிரிக்க பல சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்த பொங்கலை சமத்துவ பொங்கல் என்று கொண்டாடுகிறோம். முக்கடலும் சங்கமிக்கின்ற இந்த குமரிக்கடல் கடற்கரையில் முதலில் 100 பானையில் பொங்கல் வைக்க கூட ஆள் கிடையாது.

ஆனால் இன்று பொங்கல் வைக்க பெண்கள் கூட்டம் குழுமிக்கொண்டிருக்கிறது. காசுக்காக இந்த கூட்டம் வரவில்லை. அன்பால் வந்தது. இந்த சமத்துவ பொங்கலை எல்லோரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். இந்த பொங்கல் விழா உலகமெங்கும் பேசப்பட வேண்டும்" என்றார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com