

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பாலாற்று பகுதியில் நேற்று 3 பேர் நடந்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை வனத்துறையினர் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1½ அடியிலான 2 ஐம்பொன் சிலைகள் இருந்தன.
இதனையடுத்து அந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றி, அவர்களை பர்கூர் போலீசாரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 32), தேவராஜ்(23), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரிச்ஒன்(19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்சொன்ன 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிலையை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.