ஈரோடு இடைத்தேர்தல்: புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
ஈரோடு,
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். ஆனால், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்., 5-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 1800-425-0424, 0424 2267674, 0424 2267675, 04242267679, 9600479643 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை எண்கள் 0424 2242136 5 04242242258 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.