ஈரோடு: 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை

ஈரோட்டில் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (40 வயது). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும், பெருந்துறையைச் சேர்ந்த கீதா (32 வயது) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த தம்பதியினர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாதேஸ்வரன் தன்னுடைய மனைவியுடன் அருகில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு குழந்தை இல்லாதது குறித்து சகோதரரிடம் கூறி அழுது உள்ளார். இதனால் அவர் மாதேஸ்வரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே சென்றார்.
இதற்கிடையில் மனம் உடைந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் உள்ள விட்டத்தில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு கொண்டனர். சிறிது நேரம் கழித்து அவருடைய சகோதரர் வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.
அப்போது மாதேஸ்வரன், கீதா இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மாதேஸ்வரன், கீதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.