

ஈரோடு,
ஈரோடு: காவிரி ஆற்றில் 2-வது நாளாக செத்து மிதந்த மீன்கள். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர், அணைக்கட்டுகளில் தேங்கி நிற்பதால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. அம்மாபேட்டை மற்றும் நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி கதவணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் திடீரென அடர் பச்சை நிறமாக மாறி பார்ப்போரையே அதிர வைத்துள்ளது.
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் முதல் நாள் மீன்கள் செத்து மிதந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்றும் 2-வது நாளாக நெரிஞ்சிப்பேட்டை மேல்பகுதியான சித்தையன் நகர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்துள்ளன.
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் ரசாயன கலவைகள் ஏதாவது கலந்திருக்கலாம். இதனால் மீன்கள் செத்திருக்கலாம். அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இறந்த மீன்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
ஆறு முழுவதும் மீன்களாகவே நிறைந்து காட்சியளிப்பதால், அந்தப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெறும் கவலையில் உள்ளனர். ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நெஞ்சப் பதற்றத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்தத் தண்ணீரைத்தான் குடிநீராகவும் பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதால், நோய் தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உறைந்துள்ளனர்.